Tuesday, March 29, 2011

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை இறுதிப் போட்டிக்கு தகுதி


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான அரையிறுதி போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் பகல்இரவு ஆட்டமாக நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் குப்டில் 39 ஓட்டங்களையும், டெய்லர் 36 ஓட்டங்களையும், ஸ்டைரிஸ் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க, மெண்டிஸ் தலா 3 விக்கெட்டுகளையும், முரளிதரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

218 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தரங்க 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மறுமுனையில் இருந்த டில்சான் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 73 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய சங்கக்கார 54 ஓட்டங்களையும், ஜயவர்தன ஒரு ஓட்டத்துடனும், சாமர சில்வா 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் 32.4 ஓவர்களுக்கு 160 ஓட்டங்களை பெற்று 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை 169 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து போட்டியின் நிலையை மாற்றியது.

எனினும் தொடர்ந்து களமிறங்கிய மெத்தியூசின் சிறப்பான துடுப்பாட்டத்தால் இலங்கை அணி 47.5 ஓவர்களில் 220 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. களத்தில் மெத்தியூஸ் 14 ஓட்டங்களையும் சரவீர 23 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றனர்.

No comments:

Post a Comment